இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்
சுருக்கமாக ஐஆர்சிடிசி (IRCTC) என்றழைக்கப்படும் இந்தியத் தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமாக தொடர்வண்டிப் பயணிகளுக்கு உணவு வழங்கல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணையவழி பயணச்சீட்டுப் பதிவு ஆகிய சேவைகளை மேற்கொள்கிறது.
![]() | |
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
தலைமையகம் | புதுதில்லி, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
தொழில்துறை | தொடர்வண்டிப் போக்குவரத்து |
சேவைகள் | உணவு வழங்கல், சுற்றுலா மற்றும் இணையவழி பயணச்சீட்டு |
தாய் நிறுவனம் | இந்திய இரயில்வே |
இணையத்தளம் | IRCTC website |
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், குறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.
சேவைகள்
உணவு வழங்கல்
இந்த நிறுவனம் இந்தியா முழுமையும் தொடர்வண்டிகளிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் பயணிகளுக்கான உணவு வழங்கும் பொறுப்பு ஏற்றுள்ளது. தொடர்வண்டி செல்லும் தொலைவு மற்றும் சராசரி பயணிகள் எண்ணிக்கை இவற்றைக் கொண்டு இரயில்வே நிறுவனம் தொடர்வண்டிகளில் சமையலகப் பெட்டிகளை இணைக்கிறது. சமையலகப் பெட்டிகள் இணைக்கப்படாத வண்டிகளுக்கு வழியிலுள்ள தொடர்வண்டி நிலையங்களிலிருந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இணையவழி பயணச்சீட்டு
ஐஆர்சிடிசி இந்திய இரயில்வேயின் செயல்திறனை கூட்டும்விதமாக இந்தச் சேவையில் புகழ்பெற்றுள்ளது. பயணச்சீட்டு பதிவு செய்ய தொடர்வண்டி போல நீண்ட வரிசைகளில் நின்ற காலத்தினை மாற்றி எங்கிருந்தும் இணையவழியே பதிவு செய்யும் சிக்கலற்ற செய்முறையை அறிமுகப்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களில் புரட்சி செய்துள்ளது. இணையம் மட்டுமன்றி நகர்பேசிகளில் ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் குறுஞ் செய்திகள் மூலமாகவும் பதிவு செய்ய இயலும். பதிவு செய்வதுடன் பயணச்சீட்டு பதிவை ரத்தாக்கவும் மாற்றவும் இணையவழியே இயலும். இ-பயணச்சீட்டு போன்றே ஐ-பயணச்சீட்டையும் வழங்குகிறது. இ-பயணசீட்டு பயணியே தனது கணினியில் அச்சிட இயலும்; ஐ-பயணச்சீட்டில் இணையவழி பதிவுக்குப் பின்னர் வழமையான பயணச்சீட்டு அஞ்சல் வழியே அனுப்பப்படும். காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணச்சீட்டுகளின் பிஎன்ஆர் எண் வழியே தற்போதைய நிலை அறியும் சேவையும் வழங்கப்படுகிறது.
மும்பை புறநகர் தொடர்வண்டிகளில் பயணம் செய்வோருக்கு மாதாந்திர, காலாண்டு பருவப் பயணச்சீட்டுகளும் இணையம் வழியே பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
அடிக்கடி பயணம் செய்வோருக்கு "சுபயாத்ரா" என்ற பற்றுறுதி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பயணிகளுக்கு பயணச்சீட்டுக் கட்டணத்தில் தள்ளுபடிகள் கொடுக்கப்படுகின்றன.[1]
அண்மையில் ஐஆர்சிடிசி வான்வழிப் பயணங்களுக்கும் தங்குவிடுதி வசதிகளுக்கும் இணையவழியே முன்பதிவு செய்யத் துவங்கியுள்ளது.[2]
சுற்றுலா
உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்காக ஐஆர்சிடிசி சிக்கன மற்றும் சொகுசு தொகுப்புச் சுற்றுலா திட்டங்களை கையாள்கிறது. பரவலாக இந்தியாவின் முதன்மையான சுற்றுலா இடங்களுக்குச் செல்கின்ற ஓர் தொகுப்பாக பாரத் தர்சன் விளங்குகிறது.[3] சிறப்பு தொடர்வண்டிகளில் சொகுசு சுற்றுலா திட்டங்களாக உள்ள சில:
- பேலஸ் ஆன் வீல்ஸ் (சக்கரங்களுள்ள அரண்மனை)
- ராயல் ஓரியன்ட் எக்ஸ்பிரஸ்
- கோல்டன் சாரியட் (தங்க இரதம்)
- டெக்கான் ஒடிசி
- ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்
- மஹாபரிநிர்வாண் எக்ஸ்பிரஸ் (பௌத்த தொடர்வண்டி சுற்று)
மேலும் மகாராஜா எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் ஐஆர்சிடிசி பங்காளராக உள்ளது.[4]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- Shubh Yatra loyalty program
- IRCTC
- Bharat Darshan
- Gupta, Jayanta (2010-03-19). "Rs 1 lakh a night on Maharajas’ Express". Times of India. http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Rs-1-lakh-a-night-on-Maharajas-Express/articleshow/5700045.cms. பார்த்த நாள்: 2010-04-06.