இண்டிகா (நூல்)

இண்டிகா மெகஸ்தெனஸ் இந்தியாவை பற்றி எழுதிய நூலாகும். அலெக்சாண்டருக்குப் பிறகு பாரசீக, பாபிலோனிய நாடுகளை ஆண்ட செலூகஸ் நிகேடரின் தூதராக மௌரியப் பேரரசரான சந்திரகுப்தரின் அரசவைக்கு அனுப்பப்பட்டவர் மெகஸ்தெனஸ். எட்டு பகுதிகளைக் கொண்ட இந்நூல் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை. 1846 - ல் பேரறிஞர் இசுவான் பெகுக் என்ற செருமானியர் சிதறிகிடந்த மெகஸ்தனிசின் குறிப்புகளைத் தொகுத்து ஒழுங்குப்படுத்தினார். ஜே.டபிள்யூ. மாக்ரின்டல் இதை கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

அலெக்சாண்டர் கங்கை பகுதிக்கு படையெடுத்துச் செல்லாததற்குக் காரணம் அங்கே புகழ்பெற்ற நான்காயிரம் யானைகளையுடைய படை இருந்ததாக கேள்விப்பட்டதே ஆகும் என்கிறார் இவர். நம்ப முடியாத பல தகவல்களும் இந்நூலில் உள்ளன. இந்தியாவில் ஒரே கால் உடைய மக்கள், கொம்புள்ள குதிரைகள், சிறகு முளைத்த பாம்புகள், பாதங்களை தொடக்கூடிய அளவு நீண்ட காதுகளையுடைய மக்கள், வாயில்லாதவர், மூக்கிலாதவர், ஏழு வயதில் குழந்தை பெற்ற தாய்மார்கள் ஆகியோர் வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இவர் வழக்கமாக பொய் பேசுபவர் என்றும், அடுத்தவர்கள் சொல்வதை அப்படியே எளிதில் நம்பிவிடக் கூடியவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.