இரா. அ. பத்மநாபன்
இரா. அ. பத்மநாபன் (R. A. Padmanabhan, இறப்பு: சனவரி 27, 2014, அகவை 96) ஊடகவியலாளரும், வரலாற்றாளரும் ஆவார். மகாகவி பாரதியார் பற்றி மிக ஆழமாக ஆய்வு செய்தவர்.[1]
தனது 16வது வயதில் ஆனந்த விகடன் இதழில் பணியில் சேர்ந்தார். தினமணி கதிர் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் தி இந்து, இந்துஸ்தான், அகில இந்திய வானொலி, சென்னை அமெரிக்க மையம் போன்றவற்றிலும் பணியாற்றியவர்.
பாரதியாரின் இன்றுள்ள ஐந்து மூலப் புகைப்படங்களில் இரண்டைக் கண்டுபிடித்தவர் பத்மநாபன்.[1] பாரதியாரின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை சித்திரா பாரதி என்ற நூலாக 1957 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இதன் மீள்பதிப்புகள் 1982, 2006 இல் வெளிவந்தன. பாரதியாரின் சந்திரிகையின் கதை, ஓலை தூக்கு போன்ற ஆக்கங்களை வெளிக் கொணர்ந்தவர்.
இந்துஸ்தான் வார இதழில் பணியாற்றும் போது பாரதியாரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இரண்டு சிறப்பிதழ்களை வெளியிட்டார்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த பத்மநாபன், வ. உ. சி, வ. வே. சு. ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, சுப்பிரமணிய சிவா போன்ற பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறுகளை எழுதினார். தமிழ் ஊடகவியலின் ஆரம்ப கால வரலாறு பற்றி எழுதியுள்ளார்.
மறைவு
ஆர். ஏ. பத்மநாபன் தனது 96வது அகவையில் 2014 சனவரி 27 இல் சென்னை, பெசன்ட் நகரில் காலமானார். இவருக்கு மனைவி, மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[1]
மேற்கோள்கள்
- "Historian Padmanabhan passes away". தி இந்து (27 சனவரி 2014). பார்த்த நாள் 1 பெப்ரவரி 2014.