ஆமணக்கு

ஆமணக்கு,(ஒலிப்பு ) (Ricinus communis) வெப்பவலயப் பகுதிகளில் 10-13 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடிய மரமாகும். எனினும் மித வெப்பப் பகுதிகளில் சுமார் 1-3 மீட்டர் வரையே வளரக்கூடிய ஓராண்டுத் தாவரமாக உள்ளது. இதன் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக் கூடியது. நல்ல பேதி மருந்தாகப் பயன்படுகிறது.

ஆமணக்கு
ஆமணக்கு மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
துணைத்தொகுதி: அகலிஃபோய்டியே
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: மல்பிகியாலெஸ்
குடும்பம்: இயுஃபோர்பியேசியே
சிற்றினம்: அகலிஃபியே
பேரினம்: ரிசினஸ்
இனம்: ரி. கொம்யூனிஸ்
இருசொற் பெயரீடு
ரிசினஸ் கொம்யூனிஸ்
லின்.
விதைகள்
பச்சை வகை ஆமணக்கு

கோயில்களுக்குச் விளக்கேற்றப் பயன்படும் பலவிதமான எண்ணெய் வகைகளில் சிறப்பாகாக் குறிப்பிடப்படுவது ஆமணக்கு எண்ணெய்தான். கோயில்களின் தெய்வீகத் தன்மைகளுடன் ஒட்டி அமைந்துவிட்ட இந்த எண்ணெய், ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படுகின்றது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கொட்டையூரிலுள்ள திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோயிலில் இம்மரத்தைக் காணலாம். இம்மரமே இக்கோயிலின் தலமரமாகும்[1]

இந்தச் செடியில் மருத்துவ குணங்கள் மிகவும் நிறைந்து இருப்பதாலும், பொருளாதாரப் பலன்கள் அதிகளவில் இருப்பதாலும் தமிழக அரசு இதனை அதிகளவில் வளர்க்க பெரிதும் ஊக்கப்படுத்துகிறது.

விவசாய விளை நிலங்களின் ஓரங்கள், தோட்டந்துரப்புகள், தரிசு நிலங்கள், மணல் பிரதேசங்கள், வளம் குறைந்த பகுதிகளிலும் நன்றாக வளர்வதால் இன்று மிக அதிகளவில் பிரபலமடைந்து வருகின்றது.

எண்ணெய் வித்துக்கள் பலவகைகளில் காணப்படுகின்றன. அவற்றின் மருத்துவ குணங்களும் எண்ணிலடங்காதவை. ஆமணக்கு மிகச்சிறந்த எண்ணெய் வித்தாகும். இதிலிருந்து எடுக்கப்படுகின்ற விளக்கு எண்ணெயை யுனானி மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்றார்கள்.

ஆமணக்கு செடியின் விதை கொட்டை முத்து எனவும் அழைக்கப்ப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன.

வகைகள்

பொதுவாக ஆமணக்குச் செடிகளைப் இருவகைகளாகப் பிரிக்கலாம்.

  • சிற்றாமணக்கு
  • பேராமணக்கு

செல்வாமணக்கு என்ற ஒரு வகையும் காணப்படுகின்றது. இது தவிர, காட்டாமணக்கு, எலியாமணக்கு போன்ற பெயர்களில் குத்துச்செடி ஆமணக்குச் செடிகள் இருக்கின்றன. பேராமணக்குப் பொதுவாக ஆற்றங்கரையோரங்களில் பயிரிடப்படுகின்றது. இதனை படுக்கையாமணக்கு என்றும் கூறுவார்கள்.

காணப்படுமிடம்

ஆமணக்குச் செடிகள் பொதுவாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் காணலாம். இந்தியாவில் எல்லா இடங்களிலும் தரிசு நிலங்களிலும் இவை நன்றாக வளர்கின்றது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில் இவை மிக நன்றாக வளரும்.

தோற்றம்

ஆமணக்குச் செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும் ஒரு வகையான புதர்ச் செடியாகும். இதனை ஒரு சிறிய மரம் என்றே கூறலாம். பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும். இதன் தண்டுப் பகுதியில் வெள்ளையான வண்ணத்தினைப் போன்ற மாவு படிந்து காணப்படுகின்றன.

இதன் இலைகள் நீண்ட காம்புகளையுடையதாக இருக்கின்றது. இந்தக் காம்பின் அடியில் சுரப்பியும், கை வடிவத்தில் பிளவுபட்ட மடலும், அதில் பல் விளிம்பு பற்களும் காணப்படுகின்றன. ஆண், பெண் வகைகளில் இரு விதமான மலர்கள் இதில் காணப்படுகின்றன. ஆண் மலரில் மகரந்தத்தூள்கள் பல கற்றைகளாகவும், பெண் மலரில் சூல்பை மூன்று அறைகளையும் கொண்டு இருக்கின்றது. இதன் கனிகள் கோள வடிவத்தில் வெடிகனியாகக் காணப்படும். முட்கள் நிறைந்து இருக்கும். இதன் விதைகள் முட்டை வடிவத்தில் அடர்ந்த சாம்பல் நிறக்கோடுகளையும், புள்ளிகளையும் கொண்டது. இந்தச் செடியில் மருத்துவ குணங்கள் மிகவும் நிறைந்து பொருளாதாரப் பலன்களும் உள்ளன. இதில மலர்கள் ஆண்டு முழுவதிலும் பூக்கின்றன.

அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்

ஆமணக்குச் செடியிலிருந்து எடுக்கப்படுகின்ற எண்ணெயில் ரிஸினோலிக், ஐஸோரிஸினோலிக், ஸ்டியரிக், டைஹைட்ராக்ஸி ஸிடியரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கி இருக்கின்றன. இதன் விதைகளில் லைபேஸ், ரிசினைன் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இதன் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் ரிசினைன் அல்கலாய்டுகள் இருக்கின்றன.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்

கும்பகோணத்திற்கு மேற்கில் அமைந்துள்ள திருக்கொட்டையூர் என்ற தலத்தில் திருக்கோயில் தலவிருட்சமாக ஆமணக்கு (கொட்டைச் செடி) வணங்கப்படுகிறது. திருக்கொட்டையூர் என்னும் ஊர் கும்பகோணத்துக்கு மேற்கில் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு கோடீஸ்வரர், பந்தாடுநாயகி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் ஆமணக்குச் செடியாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் ஆமணக்குச் செடியையும் சேர்த்து வணங்குகின்றார்கள். இங்குள்ள ஆமணக்குச் செடியில் “மூலவலிங்கம்” தோன்றியதாகக் கூறப்படுகிறது. இங்கு “கோடீஸ்வரர்” ஒரு கோடி லிங்கத்தைக் கட்டியதாகவும், அதனால் தான், இதற்கு அப்பெயர் வந்ததாகவும் மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன.

தேவாரத்தில்

திருநாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் இக்கோவில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

பாடல் :

சண்டனைநல் லண்டர் தொழச் செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய்

தொண்டர்பலர் தொழு தேத்துங் கழலான் கண்டாய் சுடரொளியாய் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்

மண்டுபுல் பொன்னிவலஞ் கழியான் கண்டாய் மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்

கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் தானே

உற்பத்தி

உலக ஆமணக்கு உற்பத்தி தரவரிசை – 2013
நாடு உற்பத்தி (டன்கள்) குறிப்பு
 1,744,000
 60,000*
 60,000F
 13,000*
 12,000*
 11,953
 11,000*
 6,200F
 6,000*
 6,000*
 World 1,854,775 A
No symbol = official figure, F = FAO estimate, * = Unofficial/Semi-official/mirror data, A = Aggregate (may include official, semi-official or estimates);

Source: Food And Agricultural Organization of United Nations: Economic And Social Department: The Statistical Division

காட்டு ஆமணக்கு

காடுகளில் வளரும் இந்தக் காட்டாமணக்கு மருந்துக்குப் பயன்படும் ஒரு மூலிகை. இது விளக்கெண்ணெய் எடுக்கப் பயன்படாது.


இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.