ஆப்பெரா
ஆப்பெரா (தமிழக வழக்கு: ஓபெரா) (Opera) என்பது இசையும், நாடகமும் சேர்ந்ததும், மேனாட்டுச் செந்நெறி இசை மரபைச் சார்ந்ததுமான ஒரு கலை வடிவம் ஆகும். இதில் பாடகர்களும், இசைக் கலைஞர்களும் நடிப்பையும் மேற்கொள்வர். இதன்போது உரைகளும் இசைப்பாடல்களும் பயன்படுத்தப்படும். ஆப்பெராவில், பொதுவான பேசி நடிக்கும் நாடகங்களில் காணப்படும் நடிப்பு, காட்சியமைப்புகள், உடை போன்ற கூறுகள் இருக்கும். சில சமயம் நடனமும் இடம்பெறுவது உண்டு. இவை, ஆப்பெரா மாளிகை (opera house) எனப்படும் அரங்குகளில், இசைக்குழுவின் (orchestra) துணையுடன் நிகழ்த்தப்படும்.

ஆப்பெராக்கள் முதன் முதலாக இத்தாலியில், 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1597, புளோரன்ஸ்) நிகழ்த்தப்பட்டன. இது விரைவிலேயே ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியது. ஜேர்மனியில் ஹீன்றிஷ் சுல்ட்ஸ், பிரான்சில் ஜான்-பப்டிஸ்ட் லுல்லி, இங்கிலாந்தில் ஹென்றி பர்செல் போன்றவர்கள் ஆப்பெராக்களை எழுதினர். இவர்கள் அனைவரும் 17 ஆம் நூற்றாண்டில், இக் கலை வடிவத்தின் அவரவர் நாட்டு மரபுகளை உருவாக்க உதவினர். எனினும், 18 ஆம் நூற்றாண்டில் இத்தாலிய ஆப்பெராவே பிரான்ஸ் தவிர்ந்த ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளில் முதன்மை பெற்றிருந்தது.