ஆசிய இதழியல் கல்லூரி, சென்னை
ஆசிய இதழியல் கல்லூரி, சென்னை (Asian College of Journalism, ACJ) இந்தியாவில் இதழியலில் பட்டமேற்படிப்பு அளிக்கும் ஒரு முதன்மையான கல்லூரியாகும். இந்தக் கல்லூரி இதழியலில் நான்கு சிறப்புப் பாடங்களில், (தொலைக்காட்சி,அச்சு, புதிய ஊடகங்கள் மற்றும் வானொலி), ஓராண்டு பட்டமேற்படிப்பு பட்டயங்கள் அளிக்கிறது.
முதல் நான்குமாதத் தொகுதியில் அனைத்து மாணவர்களும், எந்த சிறப்புப் பாடம் எடுத்திருப்பினும், அடிப்படை ஒலி/ஒளிபரப்பு, இணையம் மற்றும் அச்சு ஊடகங்களில் பயிற்சி பெறுகின்றனர். சிறப்புப் பாடப் பயிற்சிகளில் முகனையான கூறாக கல்லூரிகுள்ளேயே பதிப்பிக்கப்படும் ஆக்கங்களில் மாணவர்கள் தொடர்ந்து பங்காற்றுவதாகும். அச்சு ஊடக மாணவர்கள் தங்கள் செய்தித்தாளான, த வேர்ட், வாரமிருமுறை இதழை வெளியிடுகின்றனர். அதேபோல புது ஊடக மாணவர்கள் தங்கள் இணைய இதழ், ஏசிஜே நியூஸ்லைனிற்கு நாள்தோறும் பங்காற்றுகின்றனர். தொலைக்காட்சி மற்றும் வானொலி மாணவர்களும் தங்கள் செய்தி நிகழ்ச்சிகளை தயாரிக்கின்றனர்.
வரலாறு
இந்தியன் எக்சுபிரசு குழுமம் 1994ஆம் ஆண்டு அச்சு ஊடகத்தில் மட்டும் கல்வி வழங்கிய ஆசிய இதழியல் கல்லூரி, பெங்களூருவை நிறுவியது. 2000ஆம் ஆண்டு இதழியல் மற்றும் ஊடகவியலாளர் சசி குமார் நிறுவிய இலாபநோக்கற்ற அறக்கட்டளை கையகப்படுத்தியது. இந்த அறக்கட்டளை கல்லூரியை சென்னையில் வாலாசா சாலையில் முன்பு த இந்து இயங்கிய அலுவலக வளாகத்திற்கு மாற்றியது. முதலிரு ஆண்டுகள் கே தாமசு உம்மன் தலைமை வகித்தார். தாமசு உம்மன் 1980களில் டைம்சு நிறுவனத்தின் இதழியல் பள்ளியை அமைத்திருந்தார். தற்போது இக்கல்லூரி மீடியா டெவலப்மென்ட் பவுண்டேசன் வழியாக நிர்வகிக்கப்படுகிறது.
இந்தக் கல்வித்திட்டத்திற்கு சேர்க்கை மூன்று கட்டங்களாக உள்ளது:
- விண்ணப்பம் - விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு வெற்றியாளர்கள் மட்டுமே தேர்வு எழுத அழைக்கப்படுகின்றனர்
- தேர்வு - ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கட்டுரைத்திறன்
- நேர்முகம் - தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் நேர்முகம்