அவள் ஒரு ஜீவநதி
அவள் ஒரு ஜீவ நதி இலங்கையில் தயாரிக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டில் வெளியீடப்பட்ட தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனைத் தயாரித்தவர் ஓர் எழுத்தாளரான மாத்தளை கார்த்திகேசு. இவர் எழுதிய பல நாடகங்கள் கொழும்பில் மேடையேறியிருந்தன. எனவே நாடக மேடை அனுபவத்துடன் திரைஉலகத்திகு வந்தார் என்று சொல்லலாம்.
அவள் ஒரு ஜீவநதி | |
---|---|
இயக்கம் | ஜே. பி. ரொபேர்ட், ஜோ மைக்கல் |
கதை | மாத்தளை கார்த்திகேசு |
இசை | எம். எஸ். செல்வராஜா |
நடிப்பு | டீன் குமார் விஜயராஜா கே. எஸ். பாலச்சந்திரன் பரீனா லை எம். ஏகாம்பரம் கார்த்திகேசு திருச்செந்தூரன் அனுஷா ஆர். சிதம்பரம் சீதாராமன் கந்தையா சந்திராதேவி ஸ்ரீதர் மோகன்குமார் சந்திரகலா |
வெளியீடு | 1980 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
டீன்குமார், விஜயராஜா, கே. எஸ். பாலச்சந்திரன், பரீனாலை, எம். ஏகாம்பரம், மாத்தளை கார்த்திகேசு முதலானோர் இந்தத் திரைப்படத்தில் நடித்தனர். ஜோ மைக்கல் என்பவரே தொடக்கத்தில் இந்தத் திரைப்படத்தின் இயக்குனராக செயற்பட்டார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஜே. பி. ரொபேர்ட் பின்னர் இயக்குனராகினார். 'கவின் கலை மன்றம்' நாடக மன்றத்தில் கார்த்திகேசுவின் நாடகங்களை இவர் இயக்கியவர்.
ஈழத்து ரத்தினம், சி. மெளனகுரு, கார்த்திகேசு ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு, இசை அமைப்பாளர் எம். எஸ். செல்வராஜா இசை அமைக்க, வி. முத்தழகு, கலாவதி, எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை, சுஜாதா அத்தனாயக்க, ஜோசப் ராஜேந்திரன் ஆகியோர் பாடினார்கள்.
கதைச் சுருக்கம்
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மலையகத்தில் உள்ள ஓர் எஸ்டேட் சொந்தக்காரரின் (கார்த்திகேசு) ஒரேயொரு செல்லமகள் (பரீனாலை) தன் சொந்த அத்தானை (விஜயராஜா) விரும்புகிறாள். ஆனால் அது ஒருதலைக் காதலாகிப் போய்விடுகிறது. பொதுத் தொண்டில் ஈடுபடும் அவனை, அவன்மீது ஆத்திரம் கொண்ட அவனது நண்பனே (பாலச்சந்திரன்) ஆள் வைத்து பொதுக்கூட்டத்தில் கல்லால் எறிவித்து காயம் அடையச் செய்கிறான். அந்த அத்தான் தனக்கு இரத்ததானம் செய்து தன்னைக் காப்பாற்றிய மருத்துவ தாதியை (அனுஷா) விரும்பி மணம் செய்து கொள்கிறான். ஏமாற்றமடைந்த அவனது மைத்துனியான அந்தப் பணக்காரப்பெண் தற்கொலை செய்யப் போகிறாள். அவளை கெடுக்கமுற்படும் தீயவர்களிடமிருந்து ஓர் எழுத்தாளன் (டீன்குமார்) காப்பாற்றுகிறான். இருவரும் ஒன்றாக இருக்க நேர்ந்தபோதிலும் அவர்களிடையே பரிசுத்தமான நட்பே இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த எழுத்தாளன் கொலை செய்யப்பட, அந்தப்பெண் துறவறம் பூணுகிறாள்.