அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்)

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
இசைஎஸ். தட்சிணாமூர்த்தி
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
பி. பானுமதி
பி. எஸ். வீரப்பா
வெளியீடு1955
ஓட்டம்160 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமாக இப்படம் அமைந்தது.

நடிகர்கள்

இந்த படத்தில் நடிக்க எம். ஜி, ஆர் அவர்களுக்கு சம்பளமாக 12,500 ரூபாய் வழங்கப்பட்டது.[1]

கதைச்சுருக்கம்

அமீர் காசிம் கான் என்ற அரசனிடம் அகப்பட்டிருக்கும் பாக்தாத் நடன அழகி மார்சியானாயை (பானுமதி) காப்பாற்றுகிறான் மரவெட்டி அலிபாபா (எம்.ஜி.ஆர்). அலிபாபா வீட்டில் அடைக்கலம் புகும் மார்சியானா, அலிபாபாவை விரும்புகிறாள்.

ஒரு நாள், மரம் வெட்ட அலிபாபா செல்லும் பொழுது, கொள்ளையன் அபு ஹுசைனின் ரகசிய குகையை பார்த்துவிடுகிறான். அபு ஹுசைன் பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் கேட்டுவிடுகிறான் அலிபாபா. அந்த கொள்ளையர்கள் சென்ற பின்னர், அந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி, கொள்ளையர்களின் செல்வத்திலிருந்து சிறிதளவை எடுத்துச் சென்று ஏழைகளுக்கு உதவுகிறான் அலிபாபா. ஓர் இரவுப் பொழுதில், அலிபாபாவும் மார்சியானாவும் செல்வந்தர்கள் ஆகின்றனர்.

அதில் பொறாமை கொண்ட அலிபாபாவின் அண்ணன் காசிம் (எம். ஜி. சக்கரபாணி), அலிபாபாவின் திடீர் ரகசிய செல்வத்தை பற்றி தெரிந்து கொள்ள சலீமாவின் உதவியுடன் முயற்சிக்கிறான். அவ்வாறாக ரகசியத்தை தெரிந்து கொண்ட காசிம், அலிபாபாவை கொல்ல முயல்கிறான். சாதுர்யமாக மார்சியானா உதவி செய்ய, சண்டையிட்டு தப்பிக்கிறான் அலிபாபா.

பின்னர், பேராசை கொண்ட காசிம், அபு ஹுசைனின் ரகசிய குகைக்கு செல்கிறான். தங்கத்தையும் வைரத்தை அதிகம் பார்த்த அதிர்ச்சியில் கடவுச்சொல்லை மறந்து உள்ளவே அகப்பட்டு அபு கையால் கொல்லப்படுகிறான் காசிம். மீண்டும் அலிபாபா குகைக்கு வந்து தன் அண்ணன் இறந்ததைக் கண்டு அதிர்ந்து போய், சடலத்தை அப்புறப்படுத்துகிறான். காசிமின் மரணத்திற்கு பிறகு, பாக்தாத்தின் புதிய அரசனாகிறான் அலிபாபா. அந்நிலையில், கொள்ளையன் அபு ஹுசைன் குகைக்கு திரும்பி வர, காசிமின் சடலம் காணாமல் போனதை கண்டு அதிர்ந்து போகிறான். அந்த சடலத்தை எடுத்தவனை பிடிக்க கொள்ளையர்கள் தேடத்துவங்கினர்.

செருப்பு தைக்கும் குலாம் மூலமாக, அலிபாபாதான் அந்த மர்ம நபர் என்று தெரிய வந்ததும், குலாமை கொள்கிறான் அபு. அலிபாபாவை கொல்ல திட்டம் தீட்டி தனது சக கொள்ளையர்களை எண்ணெய் பீப்பாயில் ஒளியச்செய்து, வியாபாரி போல் வேடம் பூண்டு வருகிறான் அபு. அந்த சதி திட்டத்தை அலிபாபாவும் மார்சியானாவும் எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதே மீதிக் கதையாகும்.

இசை / பாடல்கள்

மதுரகாசி எழுதிய பாடல்களுக்கு[3][4], சுஸர்லா தக்ஷிணாமூர்த்தி இசை அமைத்தார்.[5]

  1. மாசிலா உண்மை காதலி
  2. சின்னஞ்சிறு சிட்டே
  3. அழகான பொண்ணு நான்
  4. நாம ஆடுவதும்
  5. உன்னைவிட மாட்டேன்
  6. உல்லாச உலகம்
  7. ஸலாம் பாபு
  8. அன்பினாலே ஆளவந்த
  9. என் ஆட்டமெல்லாம் "சின்னச்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே" என்ற பாடலை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்- "நெல்லை சென்றிருந்தபோது விடுதியில் இந்தப் பாடலை நெடுநாட்களுக்குப்பின் பார்த்தேன். இப்போது சினிமாவுக்குள் இருக்கிறேன் என்பதனால் அட என வியந்து எழுந்துவிட்டேன். அதன்பின் வெண்முரசு எழுதுவதன் இடைவெளிகளின் சோர்வை வெல்ல பலமுறை இதைப் பார்த்துவிட்டேன். ஒவ்வொருமுறையும் அட என்றே சொல்லத் தோன்றுகிறது சினிமா நடனத்தின் மிகப்பெரிய பிரச்சினை முகபாவனைகளுக்கும் நடன அசைவுகளுக்கும் இடையே இயல்பான ஒத்திசைவு நிகழ்வதுதான். சினிமாநடனம் சாதாரணமானது அல்ல. காமிராவின் கோணம், தளத்தின் ஒளியமைப்பு, உடன் ஆடுபவர்களின் அசைவு ஆகியவற்றுக்கு ஏற்ப நடன அசைவுகள் முன்னரே வகுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நினைவில் கொண்டபடி ஆடவேண்டும், அந்த நினைவுகொள்ளல் முகத்தில் தெரியக்கூடாது. அக்காட்சியின் உணர்வில் ஒன்றி ஆடவேண்டும். இன்று எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன. ஆனாலும் நடன இயக்குநர்கள் படாதபாடு படுவதைக் காண்கிறேன். இருந்தும் நடனத்திற்குரிய வாயைக் குவித்துத் திறந்து வைப்பது, நாக்கைக் கடிப்பது போன்ற பாவனைகளே ஆடுபவர்களின் முகங்களில் இருக்கும். அதைத் தவிர்க்க மகிழ்ச்சி எனத் தெரியும் ஒரே பாவனையை தக்கவைக்க அவர்களிடம் சொல்வார்கள். அவர்களும் வாயைத் திறந்து கொண்டு ஆடுவார்கள். இந்தப்பாடலில் சாரங்கபாணி இயல்பாக நடிக்கிறார். முகபாவனைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் உடலசைவுகளிலும் காலிலும் தாளம் தன்னியல்பாக நிகழ்கிறது. அவருக்கு அப்போது ஐம்பதை அடுத்த வயது என நினைக்கிறேன். எம்.என்.ராஜமும் மிகையின்றி நடித்து ஆடுகிறார். அக்கால நடிகர்களின் மேடைப் பயிற்சிதான் இந்த துல்லியத்திற்கான காரணம் என தோன்றுகிறது ஒவ்வொரு அசைவிலும் எத்தனை திட்டமிடல்! ஆனால் இயல்பாக தெரிகிறது. சத்தியம் செய்யும்போது எம் என் ராஜம் கையை இழுத்துக்கொள்கிறார். சாரங்கபாணி பாய்ந்து வந்து குதிக்கும்போது பயந்து பின்வாங்கி ஃப்யூ என அறுதல்கொண்டு மூச்சுவிடுகிறார். கெஞ்சும்போது சாரங்கபாணியின் கைவிரல்கள் பலவகையாக நெளிகின்றன. அற்புதமான பாடல். எஸ்.ஜி.கிருஷ்ணனின் குரல் சாரங்கபாணியே பாடுவதுபோல் ஒலிக்கிறது. ஜமுனாராணியின் குரலின் இனிமையும் அந்தக்காலத்தை தித்திப்பாக மீட்கிறது.

மேற்கோள்கள்

  1. "Kannan 2017, p. 69.".
  2. "RajadhyakshaWillemen1998".
  3. "http://play.raaga.com".
  4. "tinypic.com".
  5. "Baskaran1996".

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.