அம்பை

அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்சுமி (C. S. Lakshmi, பிறப்பு:1944) தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாக படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் ​பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.

சி. எஸ். லட்சுமி
புனைப்பெயர் அம்பை
தொழில் எழுத்தாளர், ஆய்வாளர்-பெண்களின் கல்வி
நாடு இந்தியர்
கல்வி பிஹெச்டி
கல்வி நிலையம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி
எழுதிய காலம் 1962 – தற்போது வரை
இலக்கிய வகை சிறுகதை, புதினம், குறுநாவல்
கருப்பொருட்கள் பெண்கள், பெண்ணியம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
சிறகுகள் முறியும்
வீட்டின் மூலையில் ஒரு சமயலறை
காட்டில் ஒரு மான்
துணைவர்(கள்) விஷ்ணு மாத்தூர்

இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் சி. எஸ். லட்சுமி (Dr. C. S. Lakshmi) என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.

வாழ்க்கை வரலாறு

1976இல் விஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டார்[1][2][3]. திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது. வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர். ‘தங்கராஜ் எங்கே‘ சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.

வெளிவந்த நூல்கள்

  • அந்தி மாலை (நாவல்)
  • சிறகுகள் முறியும் (1976) - (முதலாவது தொகுதி - ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள்)
  • வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988)
  • காட்டில் ஒரு மான் (2000)
  • சக்கர நாற்காலி
  • ஸஞ்சாரி
  • தண்ணியடிக்க
  • வற்றும் ஏரியின் மீன்கள் (2007)
  • பயணப்படாத பாதைகள் (ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத்துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு)
  • சொல்லாத கதைகள் (சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித்எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு)

ஆங்கில மொழிபெயர்ப்பில்

  • A Purple Sea (1992),
  • In a Forest
  • A Deer (2006)
  • The Face Behind the Mask of Women in Tamil literature and Society and Women Writers (1984) - (ஆராய்ச்சி நூல்)

மேற்கோள்கள்

  1. Aditi De (2005-05-06). "The little bird's long journey". தி இந்து (தி இந்து குழுமம்). http://www.hindu.com/fr/2005/05/06/stories/2005050603560300.htm. பார்த்த நாள்: 2009-12-11.
  2. Tharu, Susie J.; Lalitha, Ke. (1993). Women Writing in India: The twentieth century. Feminist Press. பக். 487–8. ISBN 1-55861-029-4, ISBN 978-1-55861-029-3. http://books.google.com/books?id=OjZYf9Xf9bcC&pg=PA488.
  3. Miller, Jane Eldridge (2001). Who's who in contemporary women's writing. Routledge. பக். 13. ISBN 0-415-15980-6, ISBN 978-0-415-15980-7. http://books.google.com/books?id=Y-TMhtk5AUYC&pg=PA13.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.