அமுது (புலவர்)

அமுது என அழைக்கப்படும் அமுதசாகரன் அடைக்கலமுத்து (செப்டம்பர் 15, 1918 - அக்டோபர் 23, 2010) ஈழத்துத் தமிழறிஞரும் புலவரும் ஆவார். இளவாலை அமுது என்னும் புனைபெயரில் பல கவிதை நூல்களை எழுதியிருக்கின்றார். செவாலியே விருது, திருத்தந்தையிடம் இருந்து பாவேந்தர் என்னும் பட்டம் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தது. கனடா தமிழர் தகவல் அமைப்பு சிறப்பு விருதும், தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவித்தது. 1984ம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கலமுத்து (அமுது), தம்பிமுத்து-சேதுப்பிள்ளை ஆகியோரின் புதல்வர் ஆவார். யாழ்ப்பாணம் புனித சார்ல்சு வித்தியாலயம், யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுப் பின்னர் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் படித்து பயிற்றப்பட்ட ஆசிரியரானார்.[2] இளவாலை என்ற ஊரில் திரேசம்மா என்பவரைத் திருமணம் முடித்தார். தகைமை பெற்ற ஆசிரியராக ஏறத்தாழ 45 ஆண்டுகள் நாட்டின் பல பாடசாலைகளில் பணியாற்றியிருக்கின்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டமும் பெற்றுள்ளார்.

இவரது முதலாவது கவிதை 1938 இல் சத்தியவேத பாதுகாவலன் என்னும் பத்திரிகையில் வெளிவந்தது.[2] தொடர்ந்து இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி, புதினம், அஞ்சல், தொடுவானம், ஈழமுரசு போன்ற பல்வேறு இதழ்களில் இலங்கையின் பெரும்பாலான இதழ்களில் வெளியாகியுள்ளன.[2]

2006ஆம் ஆண்டு தமிழ்த்துறையில் இறுதித்தேர்விற்காக டயானா மரியதாசன் என்பவர் இளவாலை அமுது பற்றிய ஆறு இயல்களைக்கொண்ட ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.[1]

எழுதிய நூல்கள்

  • நெஞ்சே நினை
  • மாதா அஞ்சலி
  • இவ்வழி சென்ற இனிய மனிதன்
  • காக்கும் கரங்கள்
  • அன்பின் கங்கை அன்னை திரேசா
  • மடுமாதா காவியம்
  • புனித அன்னம்மாள் ஆலய வரலாறு
  • அமுதுவின் கவிதைகள், (இரண்டு பதிப்புகள்)
  • இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள்
  • இளவாலை தமிழ்க் கங்கை அமுது ஜயாவின் அற்புதப் படைப்புக்கள் (தொகுப்பு)

பட்டங்கள்

சொல்லின் செல்வன் (ஞானப்பிரகாசர் தமிழ் மன்றம்)

  • புலவர்மணி (என்றி அரசர் கல்லூரி பிரித்தானியா)
  • முப்பணி வேந்தர் (பேராசிரியர் கலாநிதி இமானுவல் அடிகளார்)
  • பாவேந்தன் (புனித பாப்பரசர்)
  • தமிழ்க்கங்கை (செருமன் தமிழ்ப்பணி மன்றம்)
  • கவியரசர் (பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ்)
  • மதுரகவி (யாழ் பல்கலைக் கழக வேந்தர்)
  • கலாநிதி, (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
  • செவாலியே விருது

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.