அடைமொழி

அடைமொழி என்பது பலவகைகள் உள்ள ஒரு பொருளை, எவ்வித ஐயமும் இன்றி அப்பொருளை மட்டும் குறிக்கப் பயன்படுத்தும் ஒரு தனிச்சொல் ஆகும்.[1]

வகைகள்

  1. இனமுள்ள அடைமொழி
  2. இனமில்லா அடைமொழி[2]

இனமுள்ள அடைமொழி

பல இனங்கள் உள்ள பொருளுக்கு அதன் இனம் பிரித்து அறிய உதவும் தனிச்சொல்லே இனமுள்ள அடைமொழி ஆகும்.

எடுத்துக்காட்டு:

தமிழ்ப்பாடநூல்

”பாடநூல்” என்பது தமிழ்ப்பாடநூல், ஆங்கிலப்பாடநூல், கணிதப்பாடநூல், அறிவியல் பாடநூல், சமூக அறிவியல் பாடநூல், கணிப்பொறியியல் பாடநூல் எனப் பல வகைகள் உள்ள ஒரு பொருளைக் குறிக்கும் சொல். இவற்றுள் தமிழ்ப் பாடத்துக்குரிய நூலை வகைப்பிரித்துக் காட்ட உதவும் வகையில் “தமிழ்” என்ற அடைமொழி இணைத்து “தமிழ்ப்பாடநூல்” என அமைகிறது. ”பாடநூல்” என்பதற்கு “தமிழ்” அடைமொழியாக வந்துள்ளது. இது இன அடைமொழியாகும்.

இனமில்லா அடைமொழி

ஒரு பொருளுக்குரிய இனமாக இல்லாமல் இருப்பினும் அப்பொருளின் சிறப்புக் கருதி வழங்கப்படும் அடைமொழியே இனமில்லா அடைமொழி ஆகும்.

எடுத்துக்காட்டு:

கருநிலவு

நிலவானது வெண்மையானது; கருமை அதன் இனமன்று. எனினும் நிலைவைச் சிறப்பித்துக் கூற கருநிலவு எனப்படுகிறது. ”கருமை” என்பது “நிலவின்” இனமல்ல. எனினும் கருநிலவு என்று அடைமொழியாக வந்துள்ளது. இது இனமில்லா அடைமொழி ஆகும்.[2]

மேற்கோள்

  1. ஏழாம்வகுப்பு,தமிழ்,மூன்றாம் பருவம். இலக்கணம்: தமிழ்நாடு பாடநூல் கழகம். 2014. பக். 18,19.
  2. "அடைமொழி".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.