அங்கையன் கைலாசநாதன்

அங்கையன் கைலாசநாதன் (ஆகத்து 14, 1942 - ஏப்ரல் 5, 1976) ஈழத்து எழுத்தாளர். 33 ஆண்டுகளே வாழ்ந்திருந்த அங்கையன் நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால் பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஊடகத்துறையில் பணியாற்றியவர். சிறிதுகாலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும், வானொலி மஞ்சரி சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 17 ஆண்டுகள் எழுதியவர். ஈழத்து நெய்தல் நில மக்களது அவல வாழ்வைச் சித்திரித்து வெளிவந்த முதல் ஈழத்து நாவல் இவரது "கடல் காற்று" (1962) என்றே ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர்.

அங்கையன் கைலாசநாதன்
பிறப்புஆகத்து 14, 1942
மண்டைதீவு, யாழ்ப்பாணம்
இறப்புஏப்ரல் 5, 1976(1976-04-05) (அகவை 33)
கொழும்பு, இலங்கை
அறியப்படுவதுஎழுத்தாளர், கவிஞர், வானொலி நாடகம்
வாழ்க்கைத்
துணை
இராஜலட்சுமி
பிள்ளைகள்மூவர்

வாழ்க்கைக் குறிப்பு

1942 ஆம் ஆண்டு மண்டைதீவில் பிறந்த அங்கையன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். 1960 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், க. கைலாசபதி ஆகியோரின் வழிகாட்டலில் தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகக் கற்று சிறப்புப் பட்டதாரியாக வெளியேறினார். கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதராலயத்தில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிய போது, 1967 இல் இராஜலட்சுமி அம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். இராசலட்சுமி இலங்கைத் தமிழ்க் கலாசார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளராக இருந்தவர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

எழுத்துலகில்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் போதே அங்கையன் தன்னையொரு படைப்பாளியாக வெளிக்காட்டிக் கொண்டார். இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் பலவற்றை எழுதினார். 2000 ஆம் ஆண்டின் பின் அங்கையன் சிறுகதைத் தொகுப்பு, நாவல் பிரசுரமாகின. பிரபல திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் அங்கையன் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார். 2000, 2001 இல் வடகிழக்கு மாகாண சபை அவரது சிறுகதைத் தொகுப்புக்கும் "சிட்டுக் குருவிகளும் வானம்பாடிகளும்' என்ற நாவலுக்கும் பரிசு கொடுத்துக் கௌரவித்தது. 4 ஆண்டுகளாக அங்கையன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றினார்.

மெல்லிசைப் பாடல்கள்

ஈழத்தின் மெல்லிசைப் பாடல் முன்னோடி அங்கையன். "மணிக்குரல் ஒலித்தது' என்ற புகழ் பெற்ற பாடல் உட்பட 9 மெல்லிசைப் பாடல்களை எழுதியிருக்கிறார்.

நாவல்கள்

அங்கையனின் "சிட்டுக் குருவிகளும் வானம்பாடிகளும்" 1974 இலும் "செந்தணல்" 1968 இலும் கடல் காற்று 1962 இலும் பிரசுரமாகின. "சொர்க்கமும் நரகமும்" அவர் எழுதிய நான்காவது நாவல். செந்தணல் 1968 இல் படைக்கப்பட்ட பிரதேச நாவல். இது கொழும்பு நகர வாழ்வைச் சித்திரிப்பது. மித்திரன் இதழில் தொடர்ச்சியாக வெளிவந்தது.

கடல்சார் மக்களின் கதையே "கடல்காற்று' என்ற நாவல். அங்கையன் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்தது. 1962 இல் பல்கலைக்கழகப் போட்டியில் பரிசுபெற்ற 94 பக்கங்களையுடைய நாவல். இரண்டாவது பதிப்பையும் கண்டது. விவசாயிகளின் ஆதிக்கத்தை விவரிக்கிறது. வீரகேசரியில் "கேட்டிருப்பாய் காற்றே' என்ற நாவலை வெளியிட்டார்.

வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதினார். சிங்கள நாவலொன்றையும், தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சிறந்த சஞ்சிகை ஆசிரியர் "சமூக தீபம்' என்ற சஞ்சிகையை வெளியிட்டவர். வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகள் அவரது சிறுகதைகளை வெளியிட்டிருக்கின்றன.

மறைவு

பதினைந்து ஆண்டுகள் தரமான பல ஆக்க இலக்கியங்களைப் படைத்த அங்கையன் கைலாசநாதன் 1976 ஆம் ஆண்டு வாகன விபத்தில் சிக்கி, தமது முப்பத்தி மூன்றாவது வயதில் காலமானார்[1].

எழுதிய நூல்கள்

  • கடற்காற்று (நாவல்) பின்னர் வானொலி நாடகமாகவும் இவரால் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது.
  • செந்தணல் (நாவல்)
  • வானம்பாடியும் சிட்டுக்குருவியும் (நாவல்)
  • அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)
  • வைகறை நிலவு (கவிதைத் தொகுப்பு)
  • அங்கையன் கயிலாசநாதன் கட்டுரைத் தொகுப்பு (2010)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.