அகுதை
கூடல் அரசன்
அகுதை கூடல் நகர அரசன். (இந்தக் கூடல் வைகைஅணைக்கு அருகே உள்ள கூடலூர் என்பது அறிஞர் முடிபு. நான்மாடக் கூடலாகிய மதுரை அன்று.) (கபிலர் – புறநானூறு 347)
வேளிர்குடி அரசன்
வேள் மகளிரின் துன்பம் போக்கிய இவன் வேளிர் குடியைச் சேர்ந்தவன். (அஃதை கோசர்குடி அரசன்). இந்த அரசன் மறவர் குடியை சேர்ந்தவன் என்ற குறிப்பும் உள்ளது. அகத்தா மறவர் என்னும் பிரிவினர் இந்த அரசனின் வழித்தோன்றல்களாக இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜன் குறிப்பிடுகின்றார்.
வேள் மகளிரின் துன்பம் போக்கியது
வெளியன் வேண்மான் என்பவனின் மகன் ஆய் எயினன். பாழிப்பறந்தலை என்னுமிடத்தில் போர். மிஞிலியும், ஆய் எயினனும் எதிர்கொண்டனர். மிஞிலி எயினனை வீழ்த்தினான். ஆய் எயினன் விழுப்புண் பட்டுப் போர்க்களத்தில் வீழ்ந்துகிடந்தான். ஆய் எயினன் வளர்த்த பறவைகள் விண்ணில் பறந்து அவனுக்கு நிழல் தந்தன. போருக்கு வினை வைத்தவன் நன்னன். நன்னன் வேளிர்குடி அரசன். விழுப்புண் பட்டுக் கிடந்த ஆய் எயினனும் வேளிர்குடியைச் சேர்ந்தவன். நன்னனின் செயலைக் கண்டு துடிதுடித்த வேள்மகளிர் அகுதையிடம் முறையிட்டுக்கொண்டனர். அகுதை வேள்மகளிரின் துன்பத்தைப் போக்கினான். (பரணர் – அகநானூறு 208)
மார்பில் புண் என்னும் வதந்தி
அகுதை தேர்ச்சக்கரம் ஏறிப் புண்பட்டுக் கிடந்தான் என்னும் செய்தி ஊரில் பரவலாகப் பேசப்பட்டது. உண்மையில் அவனுக்குப் புண் ஏற்படவில்லை. அதுபோல எவ்வி வேல் பாய்ந்து மார்பில் விழுப்புண் பட்டுக் கிடக்கிறான் என்று பேசப்படும் செய்தியும் பொய்யானால் நல்லது என்று புலவர் நினைக்கிறார். (இந்தப் பெண்பாற் புலவர் எவ்வியைக் காதலித்தவர்) (வெள்ளெருக்கிலையார் – புறநானூறு 233)