அ. மாதவையா

அ. மாதவையா (A. Madhaviah) (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925) , தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.

அ. மாதவையா

பிறப்பு

அ. மாதவையா, திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர்.

கல்வி

தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892 இல் முதல் மாணவராக முடித்தார்.

பணி

பட்டம் பெற்றதும் தான் பயின்ற சென்னை கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தனது குடும்பத்தை நடத்துவதற்காக, உப்பு சுங்க இலாகா (Salt and Abkari department) நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspector ஆக ஆந்திராவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் தெலுங்கு மொழியினையும் கற்றறிந்தார்.

தொடர்கதை எழுத்தாளர்

மாதவையா தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903 ஆம் ஆண்டு முத்துமீனாக்ஷி என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.

1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் பஞ்சாம்ருதம் என்ற பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை 1924 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா மரணமடைந்தார்.

இதழாளர்

அ. மாதவையா தமிழர் நேசன், பஞ்சாம்ருதம் ஆகிய இதழ்களை வெளியிட்டார். [1]

மரணம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். சொற்பொழிவின் பொழுதே கீழே விழுந்து மரணமடைந்தார். [2]

குடும்பம்

அ. மாதவையாவுக்கு அக்காலத்தில் இருந்த அவரது குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே (1887) திருமணம் செய்யப்பட்டது. அவருக்கு, ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என்று எட்டு மகவுகள். அவருடைய பிள்ளைகளான மீனாக்ஷி தியாகராஜன், கிருஷ்ணன், முக்தா வெங்கடேஷ் என்ற முத்துலக்ஷ்மி ஆகியோர் பிரபலமானவர்கள். அறிவியல் எழுத்தாளர் பெ. நா. அப்புசாமி இவருக்கு அண்ணன் மகன்.

சுவையான செய்திகள்

படைப்புகள்

நாவல்

  • பத்மாவதி சரித்திரம் (1898)
  • முத்துமீனாட்சி (1903)
  • விஜயமார்த்தாண்டம் (1903)
  • Thillai Govindan (1903)
  • Satyananda (1909)
  • The story of Ramanyana (1914)
  • Clarinda (1915)
  • Lieutenant Panju (1915)
  • Markandeya (1922)
  • Nanda (1923)
  • Manimekalai (1923)

சிறுகதை

  • Kusika's short stories - இரண்டு பாகங்களாக 1916 இலும், 1923-24இலும் வெளிவந்தன.
  • குசிகர் குட்டி கதைகள் (ஆங்கிலத்திலிருந்து அ. மாதவையாவால் தமிழாக்கம் செய்யப்பட்டவை) (1924)

நாடகம்

  • உதயலன் (ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தெல்லோ நாடகத்தின் தமிழாக்கம்) (1903)
  • திருமலை சேதுபதி (1910)
  • மணிமேகலை துறவு (1918)
  • ராஜமார்த்தாண்டம் (1919)
  • பேரிஸ்டர் பஞ்சநாதன் (1924)

கவிதை

  • Poems (20 கவிதைகள்) (1903)
  • Dox vs Dox poems (1903)
  • பொது தர்ம சங்கீத மஞ்சரி (1914)
  • The Ballad of the penniless bride (1915)
  • புதுமாதிரி கல்யாணப் பாட்டு (1923)
  • இந்திய தேசிய கீதங்கள் (1925)

கட்டுரை

  • Thillai Govindan's Miscellany (1907)
  • ஆசார சீர்திருத்தம் (1916)
  • சித்தார்த்தன் (1918)
  • பால வினோத கதைகள் (1923)
  • பால ராமாயணம் (1924)
  • குறள் நானூறு (1924)
  • Dalavai Mudaliar (1924)
  • தளவாய் முதலியார் குடும்ப வரலாறு (1924)
  • தக்ஷிண சரித்திர வீரர்கள் (1925)

இதைத் தவிர தமிழில் சில கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவை பஞ்சாமிர்தம் என்ற இதழில் 1924 முதல் 1925 வரை வெளிவந்தன. அதைப் போலவே ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன.

இவற்றையும் பார்க்கவும்

சான்றாதாரங்கள்

  1. குடிஅரசு, 1-11-1925 பக்.9
  2. குடிஅரசு, 1-11-1925 பக்.9
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.