பொருந்தில் இளங்கீரனார்

பொருந்தில் இளங்கீரனார் சங்ககாலப் புலவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. அவை: அகநானூறு 19, 351, புறநானூறு 53[1] ஆகியவை.

பொருந்தில் என்பது ஊரின் பெயர். சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் வெற்றிகளை இவர் பாராட்டிப் பாடியுள்ளார். தம் பாடலில் புலவர் கபிலர் இறந்துபோன செய்தியையும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி

மாந்தரஞ்சேரல் இரும்பொறை

விளங்கில் போர்

மாடத்தில் மணலைப் பரப்பி அதில் அமர்ந்துகொண்டு முத்துக்களைத் தெற்றி மகளிர் தெற்றி-விளையாட்டு ஆடி மகிழும் ஊர் விளங்கில். அதன் விழுமத்தை இந்தச் சேரன் போரிட்டு அழித்தான்.

வெறுத்த கேள்வி விளங்குபுகழ் கபிலன்

கபிலன் இன்று இருந்தால் நன்று (வெற்றியைப் பாடுவான்) என்று அந்தச் சேரன் ஏங்கினானாம்.
கபிலன் பாடல் செறுத்த செய்யுளாம்.
வெறுப்பன பேசினாலும் கபிலன் கேட்டு உள்வாங்கிக்கொள்ளும் இயல்பினராம்.
இவர் புகழின் விளக்காம்.
விளங்கில் வெற்றியை இப்போது நான் பாடுகிறேன் என்கிறார் இந்தப் புலவர் இளங்கீரனார். புறநானூறு 53

நெஞ்சே!

நெஞ்சே! குடிஞை கடுங்குரல் எழுப்பும் வழியில் நான் பொருள் தேடச் செல்கிறேன். நீ என்னோடு வராமல் அவளை நினைத்துக்கொண்டிருக்கிறாயே! - தலைவன் இவ்வாறு கலங்குகிறான். - அகநானூறு 19

பல்லி தொழுவாள்

தலைவன் நினைக்கிறான்.
நான் வேற்று நாட்டில் வாழ்கிறேன். கேளிரைப் பிரிந்திருக்கிறேன். போர்வினை முடிந்தது. இல்லம் திரும்பப்போகிறேன். அங்கே அவள் ஒவ்வொரு நாளும் சுவரில் கோடு போட்டு நாளை எண்ணிக்கொண்டிருப்பாள். அவளது கண்ணீர் அவளது பொலங்குழையில் விழுந்து தெறித்துக்கொண்டிருக்கும். முன்கையால் தலையைத் தாங்கிக்கொண்டு பஞ்சணையில் கிடப்பாள். அப்போது பல்லி படும் ஒலி கேட்கும். அதனை அவள் தன் வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தாக, என் வருகையைச் சொல்லும் புள்ளாக எண்ணிப் பல்லியைத் தொழுவாள். அகநானூறு 351

வெளி இணைப்புகள்

  1. பொருந்தில் இளங்கீரனார் பாடல் புறநானூறு 53
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.