துரைச்சாமி (சின்ன மருது மகன்)

துரைச்சாமி என்பவர் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலக் கிழக்கந்தியக் கம்பெனியர்க்கு எதிராக 1785 முதல் 1801 வரை போராடிய சின்ன மருதுவின் மகன்.

வாழ்க்கைச் சுருக்கம்

சின்ன மருது மகன் துரைச்சாமியின் இயற்பெயர் முத்து வடுக நாத துரை. பின்னர் அந்தப் பெயர் துரைச்சாமி என மருவியது என்று சிவகங்கை அம்மானை எனும் நூல் மூலம் அறிய முடிகிறது. துரைச்சாமி உட்பட 11 பேரைப் பிடித்துக் கொடுத்தால் 1000 கூலிச் சக்கரங்கள் ( 18ம் நூற்றாண்டு நாணயம்) பரிசாக வழங்கப் படும் என்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனித் தளபதி கர்னல் அக்னியூ 1801, அக்டோபர் 1 இல் சிவகங்கை குடிமக்களுக்கு ஒரு பொது அறிவிப்பைப் பிரகடனப் படுத்தினார்.

மருது சகோதரர்கள் 1801, அக்டோபர் 24 இல் தூக்கிலிடப்பட்டனர். அதன் பின்னர் 15 வயதே ஆன துரைச்சாமி உட்பட 73 பேர் மலேயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) 1802, பெப்ரவரி 11 இல் நாடு கடத்தப் பட்டனர்.[1]

பினாங்கில் துரைச்சாமி

1818 ஆம் ஆண்டு தளபதி வெல்ஸ் (Colonel Welsh) பினாங்கிற்குச் சென்ற போது உடல் நலம் குன்றிய தோற்றத்துடன் காணப் பட்ட துரைச்சாமியைக் காண நேர்ந்தது. துரைச்சாமியின் அந்தத் தோற்றத்தைக் கவனித்த தளபதி வெல்ஸ் தன்னுடைய இதயத்தில் கத்தி பாய்ந்தது போல இருந்தது என குறிப்பிடுகின்றார்[2]

துரைச்சாமியின் இறுதி நாட்கள்

1891, மே 18 ஆம் நாள், துரைச்சாமியின் மகன் மருது சேர்வைகாரன் என்பவர் மதுரைக் கலெக்டரிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த மனுவில் துரைச்சாமியின் இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

துரைச்சாமி பினாங்கில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப் பட்டார். அவர் ஆங்கில அரசிடம் பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கியிருக்க அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் திடீரென துரைச்சாமி நோய்வாய்ப் பட்டு சிவகங்கைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவர் காலமானார் என்று அவருடைய மகன் குறிப்பிடுகின்றார்.[3]

மேற்கோள்கள்

  1. கே. ராஜையன் எழுதிய ஆங்கில நூல் The South Indian Rebellion
  2. Welsh’s Military Reminiscences
  3. The Madura District Records letter dated 18-5-1891 volume 4669- pages 99 & 100
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.