சோபா சிங் (ஓவியர்)

சோபா சிங் (Sobha Singh) இந்திய பஞ்சாபில் 1901 நவம்பர் 29 முதல் 1986 ஆகத்து 22 வரையிலான காலத்தில் வாழ்ந்த, அனைவராலும் நன்கு அறியப்பட்ட சமகாலத்திய ஓவியர் ஆவார்.

சோபா சிங்
Sobha Singh
தாய்மொழியில் பெயர்ਸੋਭਾ ਸਿੰਘ
பிறப்புநவம்பர் 29, 1901(1901-11-29)
இறப்பு22 ஆகத்து 1986(1986-08-22) (அகவை 84)
அறியப்படுவதுஓவியம்

ஆரம்பகால வாழ்க்கை

பஞ்சாபின் குர்தாசுபூர் மாவட்டம், சிறீ அர்கோவிந்பூரில், ராம்கார்கியா சீக்கிய குடும்பத்தில் 1901 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதியில் சர்தார் சோபா சிங் பிறந்தார். இவருடைய தந்தை தேவா சிங் இந்தியக் குதிரைப்படையில் ஒரு வீரராகப் பணியாற்றினார். இமயமலை அடிவாரத்திலுள்ள கங்கரா சமவெளியில், பாலாம்பூர் அருகில் இருக்கும் ஆந்த்ரெட்டா என்ற சிற்றூருக்கு 1949 ஆம் ஆண்டு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது.

ஓர் ஓவியராக சோபா சிங் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு நல்ல தையலர் என்று அனைவராலும் விருப்பத்துடன் கருதப்படுகிறார், ஆந்திரெட்டாவை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றிய பெருமை இவருடைய வளர்ப்பு மகள் பிபி குருச்சரன் கவுரையே சேரும். இக்கலைக்கூடத்தில் சோபாசிங்கின் ஓவியங்கள் மட்டுமின்றி போற்றுதலுக்குரிய அவருடைய கலைப்படைப்புகள் யாவும் இடம்பெற்றிருந்தன. கங்கரா சமவெளியின் அணிகலனாகக் கருதப்படும் சோபா சிங் கலைக்கூடத்தை பீபி குருச்சரன் கவுரின் மகன் இர்தாய்பால் தற்பொழுது நிர்வகித்து வருகிறார்.

கல்வி மற்றும் பயிற்சி

தன்னுடைய 15 ஆவது வயதில் சோபா சிங் அம்ரித்சரில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தில் கலை மற்றும் கைவினைப் பாடப்பரிவில் ஓராண்டு கால படிப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றார். பிரித்தானிய இந்திய இராணுவத்தில் ஒரு வரைவாளராகப் பணியில் சேர்ந்து மெசபடோமியாவில் (தற்போது ஈராக்) இருக்கும் பாக்தாத்தில் பணிபுரிந்தார். 1923 ஆம் ஆண்டில் இராணுவத்தை விட்டு விலகி அம்ரித்சர் திரும்பி அங்கு தன்னுடைய கலைக்கூடத்தை தொடங்கினார். அதே ஆண்டு வைசாக்கி நாளில் பீபி இந்தர் கவுர் என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். அம்ரித்சர், லாகூர் (1926), தில்லி (1931) கலைக்கூடங்களில் இவர் தொடர்ந்து பணிஒயாற்றினார்.

1946 ஆம் ஆண்டு லாகூருக்குத் திரும்பி சென்ற சோபா சிங் அனார்கலியில் தனது படப்பிடிப்புக் கூடத்தைத் திறந்தார். ஒரு திரைப்படத்திற்கு கலை இயக்குநராகப் பணியாற்றிய இவர் நாட்டின் பிரிவினை காரணமாக அந்நகரத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்[1]. இறுதியாக 1949 ஆம் ஆண்டு கங்கரா சம்வெளியில் உள்ள ஆந்திரெட்டாவில் குடியேறி ஒரு ஓவியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். தற்பொழுது இச்சிற்றூர் அனைவராலும் அறியப்படுகிறது.

ஓவியங்கள்

ஆந்திரெட்டாவில் தங்கியிருந்த 38 ஆண்டுகளில் சோபா சிங் நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்தார். சீக்கிய குருக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய பணிகள் ஆகியனவற்றை அவருடைய ஓவியங்கள் மையமாகக் கொண்டிருந்தன. சீக்கிய குருமார்கள் மீதான இவருடைய தொடர் ஓவியங்களில் குரு நானக் மற்றும் குரு கோபிந்த் சிங் ஆகியோரின் தாக்கம் ஆதிக்கம் செய்ததாக பொதுமக்களின் பார்வையில் கருதப்படுகிறது.

குருநானக்கின் 500 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இவர் வரைந்த உருவப்படம் குருநானக்கின் முகத்தைப் போலவே இருப்பதாக பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். குரு அமர் தாசு, குரு தேச் பகதூர், குரு அர் கிர்சன் முதலானவர்களின் படங்களையும் சோபா சிங் வரைந்துள்ளார்.

சோபா சிங் வரைந்த சோனி மாகிவால் மற்றும் இர் இரஞ்சா உருவப்படங்கள் மிகப் புகழ் பெற்றவையாகும். மேலும், இவர் சாகீத் பகத் சிங், கர்தார் சிங் சரபா, மகாத்மா காந்தி, லால் பகதூர் சாசுதிரி போன்ற தேசியத் தலைவர்களின் எண்ணற்ற உருவப்படங்களையும் ஓவியமாகத் தீட்டியுள்ளார்[2].

அவரது சுவரோவியங்கள் புது தில்லி இந்திய பாராளுமன்ற கலை தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சீக்கியர்களின் வரலாற்று பரிணாமத்தைச் சித்தரிக்கும் இவருடைய ஓவியத்தில் குருநானக்குடன் பாலா மற்றும் மர்தானா உருவப்படங்கள் ஒரு பக்கத்திலும், குரு கோபிந்த் சிங்கின் தியான உருவம் மறுபக்கத்திலும் இடம்பெற்றுள்ளன. சிற்பக்கலையிலும் சோபா சிங் வல்லவராக இருந்தார். இராந்துவா, பிரித்விராச் கப்பூர், நிர்மல் சந்திரா மற்றும் முற்றுப் பெறாத பஞ்சாபிக் கவிஞரான அம்ரிதா பிரீதம் போன்ற முன்னணி பஞ்சாபிகளின் மார்பளவு சிற்பங்கள் இவரது சிற்பக் கலைக்குப் பெருமை சேர்ப்பனவாகும். சோபா சிங்கின் அசல் படைப்புகள் ஆந்திரெட்டாவில் உள்ள இவருடைய கலைக்கூடத்தில் காட்சிப் படுத்தபொபட்டுள்ளன, பொது மக்களும் அங்கு சென்று இவற்ரைக் காண முடியும்.

1986 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 21 ஆம் நாள் சோபா சிங் சண்டிகாரில் மரணமடைந்தார். சோபா சிங் கலைக்கூடம் பாலாம்பூருக்கு அருகிலுள்ள ஆந்திரெட்டாவை மிகவும் பிரபலமாக்கியது. சுற்றுலாப் பயணிகளும் பார்வையாளர்களும் ஆந்திரெட்டாவை பார்ப்பதற்காக நாள்தோறும் சென்றவாறு உள்ளனர்.

விருதுகள்

பல விருதுகள் மற்றும் மதிப்புமிக்க கௌரவங்கள் சோபா சிங்கிற்கு வழங்கப்பட்டன. 1974 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பஞ்சாப் அரசின் பஞ்சாப் மாநில கலைஞர் விருதும், 1983 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்திய அரசின் பத்மசிறீ விருதும் அவற்றில் முக்கியமானவையாகும்[3]. பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய முனைவர் பட்டமளித்து சிறப்பித்தது[4].

தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அவரது வாழ்க்கை மற்றும் பணிகள் தொடர்பான மக்களின் ஓவியர் என்ற தலைப்பில் ஒர் ஆவணப்படம் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் 1984 ஆம் ஆண்டில் ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு இந்திய அரசு சோபா சிங் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது[5]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.